சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian  
திருவிசைப்பா

Back to Top
கண்டராதித்தர்   திருவிசைப்பா  
9.020   கண்டராதித்தர் - கோயில்  
பண் -   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )

9.020 கண்டராதித்தர் - கோயில்   (கோயில் (சிதம்பரம்) )
மின்னார் உருவம் மேல்வி ளங்க
   வெண்கொடி மாளிகைசூழப்
பொன்னார் குன்றம் ஒன்று வந்து
   நின்றது போலும்என்னாத்
தென்னா என்று வண்டு பாடும்
   தென்றில்லை யம்பலத்துள்
என்னா ரமுதை எங்கள் கோவை
   என்றுகொல் எய்துவதே. 

[1]
ஓவா முத்தீ அஞ்சு வேள்வி
   ஆறங்க நான்மறையோர்
ஆவே படுப்பார் அந்த ணாளர்
   ஆகுதி வேட்டுயர்வார்
மூவா யிரவர் தங்க ளோடு
   முன்னரங் கேறிநின்ற
கோவே உன்றன் கூத்துக் காணக்
   கூடுவ தென்றுகொலோ.

[2]
முத்தீ யாளர் நான்ம றையர்
   மூவா யிரவர்நின்னோ
டொத்தே வாழுந் தன்மை யாளர்
   ஓதிய நான்மறையைத்
தெத்தே யென்று வண்டு பாடுந்
   தென்றில்லை யம்பலத்துள்
அத்தாவுன்றன் ஆடல் காண
   அணைவதும் என்றுகொலோ

[3]
மானைப் புரையும் மடமென் னோக்கி
   மாமலை யாளோடும்
ஆனஞ் சாடுஞ் சென்னி மேல்ஓர்
   அம்புலி சூடும்அரன்
றேனைப் பாலைத் தில்லை மல்கு
   செம்பொனின் அம்பலத்துக்
கோனை ஞானக் கொழுந்து தன்னைக்
   கூடுவ தென்றுகொலோ.

[4]
களிவான் உலகிற் கங்கை நங்கை
   காதலனே அருளென்
றொளிமால் முன்னே வரங்கி டக்க
   உன்னடி யார்க்கருளும்
தெளிவா ரமுதே தில்லை மல்கு
   செம்பொனின் அம்பலத்துள்
ஒளிவான் சுடரே உன்னை நாயேன்
   உறுவதும் என்றுகொலோ.

[5]
பாரோர் முழுதும் வந்தி றைஞ்சப்
   பதஞ்சலிக் காட்டுகந்தான்
வாரார் முலையாள் மங்கை பங்கன்
   மாமறை யோர்வணங்கச்
சீரால் மல்கு தில்லைச் செம்பொன்
   அம்பலத் தாடுகின்ற
காரார் மிடற்றெம் கண்ட னாரைக்
   காண்பதும் என்றுகொலோ.

[6]
இலையார் கதிர்வேல் இலங்கை வேந்தன்
   இருபது தோளும்இற
மலைதான்எடுத்த மற்றவற்கு
   வாளொடு நாள்கொடுத்தான்
சிலையால் புரமூன் றெய்த வில்லி
   செம்பொனின் அம்பலத்துக்
கலையார் மறிபொற் கையி னானைக்
   காண்பதும் என்றுகொலோ. 

[7]
வெங்கோல் வேந்தன் தென்னன் நாடும்
   ஈழமுங் கொண்டதிறற்
செங்கோற் சோழன் கோழி வேந்தன்
   செம்பியன் பொன்னணிந்த
அங்கோல் வளையார் பாடி ஆடும்
   அணிதில்லை யம்பலத்துள்
எங்கோன் ஈசன் எம்மி றையை
   என்றுகொல் எய்துவதே.

[8]
நெடியா னோடு நான்மு கன்னும்
   வானவரும் நெருங்கி
முடியால் முடிகள் மோதி உக்க
   முழுமணி யின்திரளை
அடியார் அலகி னால் திரட்டும்
   அணிதில்லை யம்பலத்துக்
கடியார் கொன்றை மாலை யானைக்
   காண்பதும் என்றுகொலோ. 

[9]
சீரால்மல்கு தில்லைச் செம்பொன்
   அம்பலத் தாடிதன்னைக்
காரார் சோலைக் கோழி வேந்தன்
   தஞ்சையர் கோன்கலந்த
ஆராஇன்சொற் கண்டரா தித்தன்
   அருந்தமிழ் மாலைவல்லார்
பேரா உலகில் பெருமை யோடும்
   பேரின்பம் எய்துவரே. 

[10]

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai nool